மும்பை குண்டு வெடிப்பு: யாகூப் மேமன் கருணை மனு- நிராகரிக்க ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை

டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் 1994ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மண்டு விமானநிலையத்தில் யாகூப் மேமன் சிக்கினார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐயிடம் யாகூப் மேமன் ஒப்படைக்கப்பட்டார். மும்பை குண்டுவெடிப்பை வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.
தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேமன் கருணை மனு அனுப்பினார்.
தற்போது நிலுவையில் இருக்கும் யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications