உ.பியில் கவுரவக் கொலை: காதலனோடு சென்ற பெண்ணை சுட்டு எரித்த கொடூர அண்ணன்
லக்னோ: காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணனே சுட்டுக் கொன்று, சடலத்தையும் எரித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது..
அலிகார் மாவட்டத்தில் உள்ள சபாப்பூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண், ஒருவர், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, அவரையே திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண், முன்னாள் கிராமத் தலைவரான அவரது அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அண்ணன், உடன் பிறந்த சகோதரி என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அந்த பெண்ணை சுட்டுக் கொன்றார்.
தடயம் தெரியாமல் இருப்பதற்காக பிணத்தை அவரே எரித்தபோது எழுந்த புகை மூட்டத்தை கண்டு சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, சடலத்தை போட்டுவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டிருந்தார்.
பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான அந்த பெண்ணின் அண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications