மேற்கு வங்கத்தில் கட்டிய மனைவியை குடும்பத்தாருடன் சேர்ந்து எரித்துக் கொன்ற கணவன்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் ஒருவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள மெமாரி பகுதியைச் சேர்ந்தவர் ஷகிலா பீ. அவருக்கும் சைபுத்தீன் மொல்லா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்ததில் இருந்தே சைபுத்தீனும், அவரது குடும்பத்தாரும் ஷகீலாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு சைபுத்தீனும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து ஷகீலா மீது தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஷகீலாவை அக்கம்பக்கத்தினர் புர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஷகீலா சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு பலியானார். இந்த சம்பவம் பற்றி ஷகீலாவின் தந்தை அர்ஷத் ஷேக் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சைபுத்தீனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.