விடாது போராட்டம்.. விடிய விடிய சாலையிலேயே தங்கிய கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது ஆறு அமைச்சர்களும், 200க்கும் மேற்பட்ட அவர்களது ஆதரவாளர்களும், டெல்லியில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் அவர்கள் சாலையோரமாகவே தங்கியிருந்தனர். தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கெஜ்ரிவாலும், அவரது சகாக்களும் இப்படி இரவு முழுவதும் சாலையோரமாகவே தங்கிப் போராட்டம் நடத்தியதால் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார்தான் பெரும் டென்ஷனாக காணப்பட்டனர். அத்தனை பேரையும் பாதுகாப்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகியுள்ளது.

கெஜ்ரிவால் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வரும் பகுதி ஏற்கனவே, குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக பாதுகாப்புப் படையினர் வசம் கொண்டு வரப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அந்த இடத்திற்குள் இவர்கள் உட்கார்ந்து போராடி வருவதால் பரபரப்பு தொடர்கிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சாலையோரம் பாயை விரித்துப் படுத்துக் கிடந்தனர்.
டெல்லி காவல்துறைக்கு எதிராக கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் போராடி வருகின்றனர். டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், டெல்லி காவல்துறை நிர்வாகத்தை டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப் போனபோது கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ரயில் பவன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அங்கேயே கெஜ்ரிவால் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். மேலும் 10 நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறை தற்போது மத்திய உள்துறையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications