ராகுலுக்காக ஓடி ஓடி உழைத்த சந்திரபாபு நாயுடு.. சட்டசபை தேர்தலில் கோட்டை விட்டதன் காரணம்
அமராவதி: ராகுலுக்காக ஓடி ஓடி உழைத்த சந்திரபாபு நாயுடு சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
ஆந்திர சட்டசபையானது 176 தொகுதிகளை கொண்டது. இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியோ 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது.

கேள்வி
இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதையடுத்து அவர் வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் சரிவிற்கான காரணங்கள் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணி
கடந்த 2014-ஆம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஓட்டு கேட்ட சந்திரபாபு நாயுடு பாஜக அரசுடன் கூட்டணி வைத்தார். இந்த நிலையில் உறுதியளித்தபடி ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என கூறி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

காங்கிரஸுக்கு ஆதரவு
இதைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2019-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வந்தவுடன் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார் நாயுடு.

மம்தா
இதையடுத்து மோடியை தாக்கி பேசி ராகுலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனிடையே மூன்றாவது அணிக்கு ஆட்களை சேர்த்து கொண்டிருந்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இருவருக்கும் இருக்கும் மோதலால் அவர் மூன்றாவது அணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரேனும் ஆதரவு தெரிவித்து விட போகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாக ராகுலை அடுத்தடுத்து சந்திப்பது, மாயாவதி, மம்தாவை சந்திப்பது என தேவையில்லாத வேளைகளில் மூக்கை நுழைத்ததால் மாநில அரசியலில் அவரால் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை.

நாயுடு கட்சியினர் அதிருப்தி
மத்திய அரசியலில் ராகுலை பிரதமராக்க எதை எதையோ செய்து தன் சொந்த கட்சி தோல்வியடைய காரணமாகிவிட்டதாக அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். மத்தியில் செலுத்திய கவனத்தை மாநிலத்தில் செலுத்தியிருந்தால் அபாரமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே கட்சியினரின் ஆதங்கமாகும்.












Click it and Unblock the Notifications