பில்வாரா மாடலை ஒத்த புதிய யுத்தி.. பொருளாதாரமும் பாதிக்கல.. கொரோனாவும் அதிகரிக்கல..அசத்தும் ஜபல்பூர்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் கொரோனாவால் இதுவரை யாரும் பலியாகவில்லை. அது போல் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உள்ளது. கொரோனா ஒழிக்க உலக நாடுகளே திணறி வரும் போது இந்த மாவட்டத்தில் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனாவால் மத்திய பிரதேசத்தில் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள ஜபல்பூர் மாவட்டம் நல்லதொரு தடுப்பு நடவடிக்கைகளை செய்துள்ளது.
இதனால் அந்த மாவட்டத்தில் வெறும் 20 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்புள்ளது. அந்த மாவட்ட மக்கள் யாரும் கொரோனாவால் இறக்கவில்லை.
ஆக்ரா
மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, சென்னை, ஆக்ரா, இந்தூர் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் கொரோனாவை திறமையாக கையாண்டது குறித்து தற்போது பேசப்படுகிறது.
மாற்று பாதை
ஜபல்பூரில் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்ட 4 நபர்கள் மார்ச் 20-ஆம் தேதி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை ஜபல்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக மட்டுமே உள்ளது. கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று. இவர்கள் வித்தியாசமான பாதையை அமைத்துக் கொண்டுள்ளனர்.
தடுப்பு பணி
ஆம், இந்தியா முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாவட்டத்தில் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான அமித்சிங் ஆகியோரும் இணைந்து பொருளாதார ரீதியிலான மக்கள் பாதிக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.
ஸ்மார்ட் சிட்டி
ஜபல்பூரின் ஸ்மார்ட் சிட்டி ஒருங்கிணைந்த ஆணையம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கொரோனா கட்டுப்பாட்டு மையமாக மாற்றினர். இங்கு 100-க்கும் மேற்பட்டோரை பணிக்கு அமர்த்தி அறிகுறிகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வழி செய்தனர். எதெல்லாம் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக வாய்ப்பிருக்கிறதோ அவற்றை எல்லாம் கண்டறிந்து தீவிரமாக கான்டேக்ட் டிரேசிங் முறையில் கண்டறிந்தனர். அந்த இடங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஜபல்பூர் நிர்வாகம்
இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைதான் ஜபல்பூரில் கொரோனா நோயாளிகள் உயராமல் பார்த்துக் கொண்டது. கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பகுதிகள் எல்லாம் ஒரு மாதத்திற்கு மேல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வொர்க் பிரம் ஹோமிற்கு பதிலாக வீட்டிலிருந்து தயாரிப்போம் என்ற கொள்கையை சுயஉதவிக் குழுவினரை கொண்டு ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்தது.
கோவிட் 19
அது போல் துணி உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாஸ்க்கள் தயார் செய்யப்பட்டது. தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை தயார் செய்து கொடுத்தனர். இதன் மூலம் வருவாய்க்கு வருவாயும் கிடைத்தது, மாஸ்க் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இதுதான் இந்த நகரம் கோவிட் எனும் அரக்கனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.