ஒருநாள் கூட பணி செய்யாமல்.. 12 ஆண்டுகளாக ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்காரர்! எப்படி?
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2011ம் ஆண்டில் போலீஸ் பணியில் சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட போலீஸ் நிலையம் சென்று பணி செய்யவில்லை. மாறாக வீட்டிலேயே இருந்து அவர் ரூ.28 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை சம்பளமாக பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி நடந்தது? வாங்க பார்க்கலாம்.
பொதுமக்களாகிய நம்மிடம் யாராவது ஏதாவது ஒரு வகையில் மோசடி செய்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையம் சென்று புகாரளிப்போம். போலீசார் விசாரணை நடத்தி குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து பணத்தை மீட்டு தருவார்கள். அதுமட்டுமின்றி குற்றம் செய்தவருக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை வாங்கி தருவார்கள்.

ஆனால் இங்கே போலீஸ் பணியில் சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக போலீஸ் துறையையே ஏமாற்றி ஒருநாள் கூட பணி செய்யாமல் மாதம் மாதம் சம்பளம் வாங்கி உள்ளார்? என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கடந்த 2011ம் ஆண்டில் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவர் போபால் போலீஸ் லைனில் பணி நியமனம் செய்யப்பட்டார். அங்கு அந்த இளைஞர் சென்றார். அப்போது போலீசாருக்கான அடிப்படை பயிற்சிகளை பெற வேண்டும் என்பதற்காக சார் போலீஸ் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அந்த இளைஞர் போலீஸ் பயிற்சி மையத்துக்கு செல்லவில்லை. நேராக அவர் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதிகாரிகள் யாரிடமும் சொல்லாமல் அவர் தனது வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு தொடர்ந்து பயிற்சிக்கு செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தார். இருப்பினும் அவ்வப்போது தனது பயிற்சி குறித்த விவரங்களை மட்டும் ஸ்பீட் போஸ்ட்டில் போபால் போலீஸ் லைனுக்கு அனுப்பி வைத்தார். அதில் சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருப்பது போல் தெரிவித்து இருந்தார்.
இதனை அதிகாரிகள் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அந்த இளைஞர் பயிற்சி மையத்திலேயே உள்ளதாக நினைத்தனர். இதனால் அவருக்கு மாதந்தோறும் சம்பளம் என்பது வழங்கப்பட்டது. அவரது வங்கி கணக்கில் கடந்த 12 ஆண்டுகளாக மாதந்தோறும் சம்பளம் சென்றது. இதற்கிடையே தான் கடந்த 2023ம் ஆண்டில் அவர் சிக்கினார்.
அதாவது 2011ம் ஆண்டில் பணியில் சேர்ந்த போலீசாருக்கான சம்பள உயர்வு குறித்த நடவடிக்கை தொடங்கியது. அப்போது தான் அந்த இளைஞர் பணிக்கே வராமல் 12 ஆண்டுகளாக ரூ.28 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரைபிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் பணிக்கு செல்லவில்லை என்றும் கூறினார்.
அதோடு மருத்துவ சான்றிதழ்களை வழங்கினார். அதனை பரிசீலனை செய்த போலீசார் பணிக்கே வராமல் பெற்ற சம்பளத்தை திரும்ப செலுத்தும்படி கூறினர். அதுமட்டுமின்றி வார்னிங்குடன் அவர் பணியில் சேர்க்கப்பட்டார். தற்போது வரை அந்த இளைஞரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அவரது சம்பளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கப்பட உள்ளது. இந்த இளைஞர் தற்போது போபால் போலீஸ் லைனில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications