கவுரி லங்கேஷை கொலை செய்தது எப்படி? இந்துத்துவா தீவிரவாதி பரசுராம் பரபர வாக்குமூலம்!
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை படுகொலை செய்தது பற்றி தீவிரவாதி பரசுராம் பரபர வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இந்துத்துவா தீவிரவாதி பரசுராம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில் இந்துத்துவா தீவிரவாதிகள் அடுத்தடுத்து சிக்கினர்.
இந்த நிலையில் பரசுராம் வாக்மோர் என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:
பெலகாவியில் துப்பாகிச் சூடு பயிற்சி
என்னுடைய மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் எனகு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. நானும் இதற்கு ஒப்புக் கொண்டேன். யாரை கொலை செய்யப் போகிறேன் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் தற்போது ஒரு பெண்ணை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். செப்டம்பர் 3-ந் தேதி பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டேன். பெலகாவியில் ஏர்கன் மூலமாக எனக்கு துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேவு பார்த்தது எப்படி?
பெங்களூருவில் முதலில் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 2 மணிநேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் என்னை அழைத்துக் கொண்டு கொலை செய்யப்பட வேண்டியவரின் வீட்டை காண்பித்தார்.
பெங்களூருவில் முகாம்
மறுநாள் என்னை இன்னொரு அறையில் தங்க வைத்தனர். மறுபடியும் ஆர் ஆர் நகரில் உள்ள கவுரி லங்கேஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அன்று மாலைக்குள் அந்த நபரை கொலை செய்ய வேண்டும் என எனக்கு உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 5-ந் தேதி மாலை 4 மணியளவில் என்னிடம் துப்பாக்கியை கொடுத்தனர். அதன்பின்னர் நாங்கள் கவுரி லங்கேஷ் வீட்டுக்கு போனோம்.
சரமாரியாக துப்பாக்கிச் சூடு
அப்போதுதான் கவுரி லங்கேஷ் வீட்டு கேட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். அவரை மிகவும் பக்கத்தில் நெருங்கினோம். அவர் எங்களை பார்த்த போது 4 குண்டுகளால் அவரை அடுத்தடுத்து சுட்டேன். பின்னர் அறைக்கு திரும்பி அந்த இரவே பெங்களூருவை விட்டு புறப்பட்டுவிட்டேன்.
இவ்வாறு பரசுராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.