"சிலிர்க்க" வைக்கும் "பிரண்ட் ரெக்வஸ்ட்"... இளைஞர்களை மடக்கும் ஐஎஸ்ஸின் "ஹனி டிராப்"!
டெல்லி: உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் இளைஞர்களை தனது இயக்கத்தின் பக்கம் திருப்ப ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு என்ன மாதிரியெல்லாம் செயல்படுகிறது என்பது குறித்த விவரம் படிப்படியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், பெண்களை வைத்து இளைஞர்களை தன் வயப்படுத்தும் முயற்சியிலும் அந்த அமைப்பு ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
ஹனி டிராப்... ஆளை மடக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ரொம்பப் பழைய ஸ்டைல் இது. ஆனால் இன்று வரை இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்பதுதான் விசேஷமே
ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே மேனகையால் ஹனி டிராப் செய்யப்பட்டவர்தான். ஒவ்வொரு நாட்டு ராணுவமும் இதைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் ஐஎஸ் இயக்கமும் இந்த ஹனி டிராப்பைப் பயன்படுத்தி பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறதாம்.

மகாராஷ்டிர மஜீத்தை இழுத்த சிரிய டிராப்
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த ஆரிப் மஜீத்தும் இப்படிப்பட்ட ஹனி டிராப்பில் சிக்கிய இளைஞர்தான். ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து ஈராக்கில் டாய்லெட் கழுவும் நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் தற்போது அங்கிருந்து மீண்டு வந்தவர். இவரை தஹிரா பட் என்ற பெண்ணின் பெயரால் ஹனி டிராப் செய்து இழுத்தனர் தீவிரவாதிகள்.

தஹிரா பட்
சிரியாவிலிருந்து தஹிரா பட் என்ற பெண், மஜீத்துக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து பேச ஆரம்பித்தபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை மஜீத்துக்கு. என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் மஜீத், தஹிராவின் வலையில் வீழ்ந்தார்.

ஆன்லைனில்
முன்பெல்லாம் பெண்களே நேரடியாக இதில் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. ஆன்லைனில் வந்து பூசி மெழுகிப் பேசி மயக்குகிறார்கள்.

500 பேர் வரை
ஹனி டிராப் மூலம் கிட்டத்தட்ட 500 பேர் வரை ஐஎஸ் அமைப்பு ஆள் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதற்கான பெண்களை ஈராக் அல்லது சிரியாவிலிருந்து அவர்கள் தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள்.

பேசிப் பேசி
இவர்கள் தங்களது டார்கெட் இளைஞர்களை ஆன்லைனில் பேசி மடக்கி தங்களது வழிக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து ஐஎஸ் பக்கம் திருப்பி விடுகிறார்கள்.

திருமணமும் செய்கிறார்கள்
பல பெண்கள் தங்களது வலையில் விழும் ஆண்களை ஆன்லைனிலேயே திருமணமும் செய்து முழுமையாக நம்ப வைத்து விடுகிறார்கள். இவர்களில் பலர் அப்பெண்களை நேரில் சந்திக்க விரும்பி ஈராக் அல்லது சிரியாவுக்குப் போய் தீவிரவாத இயக்கத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

10,000 பேர் கொண்ட ஆன்லைன் படை
ஐஎஸ் அமைப்பு ஆன்லைனில் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவர்கள் ஆன்லைனைக் கண்காணிக்க மட்டும் 10,000 பேரை வைத்துள்ளனராம். இவர்களது வேலையே தங்களுக்குச் சாதகமான இளைஞர்களை இழுப்பதுதான்.

பேஸ்புக் வலைவீச்சு
பேஸ்புக்கைத்தான் இவர்கள் முக்கியமாக குறி வைக்கிறார்கள். அதில் உள்ள சாதகமான இளைஞர்களுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பது, சாட் செய்வது என்று இறங்கி தங்களது பக்கம் கொண்டு வருகின்றனர் இந்தப் பெண்கள்.

பல மாதம் கூட பேசுவார்கள்
சில இளைஞர்களை மடக்க பல மாதம் கூட தொடர்ந்து பேசுவார்களாம் இந்தப் பெண்கள் என்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த ஹனி டிராப் முறையை ஐஎஸ் அமைப்பு மிகவும் வெற்றிகரமாக கடைப்பிடித்து வருவதாகவும் உளவுப்பிரிவு கூறுகிறது.












Click it and Unblock the Notifications