வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து செயல்பட்ட ஜமாத் உல் பங்களாதேஷ் தீவிரவாதிகள்
டெல்லி: 2006ம் ஆண்டு வங்கதேச அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஜமாத் உல் பங்களாதேஷ் அமைப்பை அந்த நாட்டுப் பாதுகாப்புப் படையினர் ஒடுக்கி அடக்கினர். அந்தசமயத்தி்ல அந்த அமைப்பிடம் 2500 தீவிரவாத குழுக்கள் இருந்தன. ஆனால் அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக 120 ஆக அது குறைந்து போனது.
பலம் குறைந்தாலும் கூட அதன் வீரியம் குறையவில்லை. மாறாக அமைதியாகி விட்டனர். சமயம் வரும்போது சீறுவதற்கு அவர்கள் காத்திருந்தனர். மேலும் புர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு முன்பாக வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்த அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், நோக்கம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் உளவுத்துறை சேகரித்த தகவல்கள் அதிர்ச்சி அளி்பபதாக உள்ளன. இந்த அமைப்பின் முக்கிய நோ்கமே வங்கதேசத்தை குறி வைத்ததுதான் என்றாலும் கூட இவர்கள் இந்தியாவை தங்களது தலைமைக் களமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர்.
வங்கதேச அவாமி லீக் கட்சி அரசை சீர்குலைத்து வீ்ட்டுக்கு அனுப்புவதுதான் இந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய நோக்கமாகும். ஆனால் 2006க்குப் பின்னர் இவர்களால் சுதந்திரமாகச செயல்பட முடியாத நிலை. இதனால் இவர்கள் மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமுக்கும் தங்களது செயல்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
இங்கு வந்த பின்னர் தாங்கள் பலமாக செயல்படுவதற்காக லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா ஆ்கிய இரு தீவிரவாத அமைப்புகளின் உதவியை நாடினர். மேலும் தஙக்ளது போர் அரசுடனும், பாதுகாப்புப் படையினருடனும் மட்டுமே, பொதுமக்களுடன் அல்ல என்பதையும் தெளிவாக வகுத்துக் கொண்டனர்.
வங்கதேச அரசையும், பாதுகாப்புப் படையினரையும் மட்டுமே குறி வைத்துத் தாக்க வேண்டும், மக்களைத் தாக்கக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருந்தனர். அப்படி செயல்பட்டால்தான் உள்ளூர் மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் தங்களால் தக்க வைக்க முடியும் என்பது இவர்களது நம்பிக்கை.
மேலும், தங்களுக்கு ஆள் சேர்ப்பதற்காக அஹலே ஹாதித், இஸ்லாமிக் சத்ரா ஷிபிர், ஜமாத் இ இஸ்லாமி ஆகிய அமை்புகளுடன் கை கோர்த்தனர். இந்த மூன்று அமைப்புகளும் சேர்ந்து ஜமாத் உல் பங்களாதேஷுக்கு ஆட்களை சேகரித்துக் கொடுத்தன.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மேற்கு வங்கத்தில் பலமாக உள்ள சிமி அமைப்பினரோடு நல்ல தொடர்பில் இருக்கிது. அஹலே ஹாதித் அமைப்பு புதிதாக சேர்க்கப்பட்டவர்களை பிரெய்ன் வாஷ் பண்ணும் வேலையைச் செய்தது. இஸ்லாமிக் சத்ரா ஷிபிர் அமைப்புக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் நல்ல தொடர்புகள் இருந்தன. இந்த அமைப்பு சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஹவாலா மூலம் பணம் சரிவரவருவதை உறுதி செய்யும் வேலையைப் பார்த்தது.
ஜமாத் உல் பங்களாதேஷுக்கு, பெண்களும் பெருமளவில்உதவியுள்ளனர். தங்களுக்குத் தெரிந்த இளைஞர்களை, குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்த அமைப்பு குறித்து எடுத்துக் கூறி, அவர்களைச் சேர்த்து விட உதவினர். மேலும் குடும்பங்கள் மூலமாக இந்த அமைப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தும் வேலையையும் இவர்கள் செய்தனர்.
மேலும் அந்த அமைப்பினருக்கு தங்களது வீட்டுப் பெண்களையும் மணமுடித்துக் கொடுத்து, மிகுந்த ஒற்றுமையுடன் அந்த அமைப்பு இயங்குவதையும் உறுதி செய்துள்ளனர்.
உண்டியல் வசூல், கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பது, ஹவாலா உள்ளிட்ட பல வழிகளில் இவர்கள் பண வசூல் செய்துள்ளனர். குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளி்ல உண்டியல் வைத்து வசூலித்து வந்துள்ளனர். வங்கதேசத்தில் விவசாயிகளிடம் பயிர்க் கொடை என்ற பெயரில் பண வசூல் செய்துள்ளனர். ஹவாலா மூலம் கேரளாவுக்குப் பணத்தைக் கொண்டு வந்து அங்கிருந்து மேற்கு வங்கத்திற்கு அனுப்பியுள்ளனர்.
வங்கதேசத்தில் கிராமப்புறங்களில் விவசாயிகளிடம் மிகவும் புத்திசாலித்தனமாக பயிர்க் கொடை என்ற பெயரில் பணத்தை இவர்கள் கறந்துள்ளனர். பல விவசாயிகள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக இந்த தீவிரவாத அமைப்புக்கு பணம் கொடுத்துள்ளனர்.
அதேபோல கள்ள நோட்டை அச்சடித்தும் பணத்தை திரட்டியுள்ளனர். லஷ்கர் இ தொய்பாவிடமும் நிதி பெற்றுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமுக்கும் வந்து பணத்தைக் கொடுத்துள்ளதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கள்ளநோட்டுக்களை எப்படி புழக்கத்தில் விடுவது என்பதையும் பாகிஸ்தானியர்கள்தான் இந்த அமைப்பினருக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ விரும்புவோருக்கு உதவி செய்து அவர்கள் மூலமும் கள்ளப் பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர். ஆனால் கள்ள நோட்டுக்களுக்கு இந்தியாவில் கிடுக்கிப்பிடி வந்ததால் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டியல் வசூலை பெரிய அளவில் நம்பும் நிலைமை ஏற்பட்டது.
மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் பணக்கார வங்கதேசத்தினரும் கூட நிதியுதவி அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இப்படி சேகரித்த பணத்தைக் கொண்டு மேற்கு வங்கத்தி்ல சட்டவிரோதமான மதரசாக்களை நிறுவி அதன் மூலம் தீவிரவாதப் பயிற்சி, ஆயுதம் தயாரிப்பது, குண்டு தயாரிப்பது உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று உளவுத்துறை கண்டுபிடித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications