சல்மான்கான் ஜாமீன் கேசுக்கும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் ஒரு தொடர்புள்ளதே..!
மும்பை: காரை வைத்து மோதி ஒருவரை கொன்று, நான்குபேர் காயமடைய காரணமாக இருந்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நான்காண்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது மும்பை செசன்ஸ் கோர்ட். இதையடுத்து அவர், சிறையில் அடைக்கப்பட தேவையான ஆயத்தங்கள் தொடங்கின.
இந்நிலையில், மும்பை ஹைகோர்ட்டில் சல்மான்கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, சல்மான்கான் தரப்பில் மூத்த குற்றவியல் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, ஆஜரானார்.

செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு நகல் முழுமையாக வரும் முன்பே, குற்றவாளியை சிறையில் அடைக்க வேண்டிய தேவை கிடையாது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இதையடுத்து கோர்ட் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த ஹரீஷ் சால்வே, ஜெயலலிதாவுக்காகவும் வாதாடியவர் என்பது பலருக்கு மறந்திருக்கலாம்.
கடந்த 2011ம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார். அந்த வழக்கில் ஹரீஷ் சால்வேதான் ஆஜரானார். ஆனால் அப்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்த பிறகு, ஹைகோர்ட்டில், அவருக்காக ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஆனால், அரசு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சம்மதித்தும்கூட, ஜாமீன் மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு ஜாமீனுக்காக மேல்முறையீடு செய்தபோது, ராம்ஜெத்மலானியை கழற்றிவிட்டு, ஹரீஷ் சால்வேயை நாடினர். ஆனால், அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால், பாலிநாரிமன், ஜெயலலிதாவுக்காக ஆஜராகினார். ஜாமீனும் பெற்றுத்தந்தார்.












Click it and Unblock the Notifications