ஆந்திரா:சந்திரபாபு பதவியேற்பு விழா- மேடை முன்வரிசையில் ரஜினிக்கு இடம்.. நடிகை ரோஜா பேச்சே காரணம்!
விஜயவாடா: ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு முக்கியத்தும் தரப்பட்டிருந்தது பேசுபொருளாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டு அரசியலிலும் களமிறங்க முயற்சித்து தனிக்கட்சி அறிவிப்பு எல்லாம் வெளியிட்டு பின்னர் அந்த முடிவை கைவிட்டார். தமிழ்நாட்டில் 1996 தேர்தலில் ரஜினிகாந்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் பின்னர் ரஜினிகாந்தின் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

என்டிஆர் விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். ஆந்திராவில் கடந்த ஆண்டு என்டி ராமாராவ் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதனை ஏற்பாடு செய்திருந்தவர் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடுதான். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் புகழாரம்: இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து தள்ளிவிட்டார். தம்முடைய 'அரசியல்' அறிவு வளருவதற்கு காரணமே சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்புகள்தான். இந்திய அரசியல், ஆந்திரா அரசியல் மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் ரொம்பவே பிடிப்புள்ளவர் சந்திரபாபு நாயுடு. அவர் ஒரு தீர்க்கதரிசி. அதனால்தான் ஹைதராபத்தை ஹை டெக் சிட்டியாக அன்றே உருமாற்றியவர் என பேசினார் ரஜினிகாந்த்.
நடிகை ரோஜா ஆவேசம்: அப்போது ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் அரசுக்கு ரஜினிகாந்தின் இந்த பேச்சு கடும் அதிருப்தியைக் கொடுத்தது. இதனால் அமைச்சராக இருந்த நடிகை ரோஜா, ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தார். அரசியலை விட்டு ஒதுங்கிப் போவதாக அறிவித்துவிட்டு ஆந்திராவில் பாலிட்டிக்ஸ் பேசுகிறார் ரஜினிகாந்த். இது தேவையில்லாதது. தெலுங்கு பேசும் மக்கள் ரஜினிகாந்தை மன்னிக்கவே மாட்டார்கள். சந்திரபாபு நாயுடுதான் என்டிஆருக்கே துரோகம் செய்தவர். அவரை போய் எப்படி புகழலாம் எனவும் கொந்தளித்தார் நடிகை ரோஜா.
சீறிய சந்திரபாபு நாயுடு: இதற்கு சந்திரபாபு கடுமையாக பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்தை இப்படி எல்லாம் விமர்சிப்பதை தெலுங்கு மொழி பேசும் மக்கள் ஒரு போதும் ஏற்கவேமாட்டார்கள் என கூறியிருந்தார்.

சந்திரபாபு கைதால் ரஜினி கோபம்: பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யபட்டபோதும் ரஜினிகாந்த் கண்டனக் குரல் எழுப்பினார். சந்திரபாபு நாயுடு அப்படி எல்லாம் தப்பு செய்யக் கூடியவரே அல்ல என கூறிய ரஜினிகாந்த் தற்போது அமைச்சராகி இருக்கும் சந்திரபாபு மகன் நாரா லோகேஷிடம் தொடர்பு கொண்டு ஆறுதலும் கூறினார். சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்தித்து பேசவும் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.
களமிறக்கப்பட்ட ரஜினிகாந்த்: இவ்வளவு பெரிய பின்னணியில் லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கரான போது ரஜினிகாந்த் மகிழ்ச்சி அடையாமலா இருப்பார்? அத்துடன் டெல்லி பாஜக மேலிடமே ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு உத்தரவாதத்தை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து அழுத்தம் திருத்தமாக பெற்றுத்தரவும் சொன்னது. இதனை நாமும் முன்னரே எழுதி இருந்தோம். இதனால் ரஜினிகாந்தும் டெல்லி சென்று திரைமறைவு அரசியல் நகர்வுகளில் இணைந்திருந்தார்.
ரஜினிக்கு சிறப்பு: இதன் அடுத்த கட்டமாகவே இன்று ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற போது ரஜினிகாந்துடனான 30 ஆண்டுகால நட்பின் உச்சமாக, பதவியேற்பு விழா மேடையில் முதல் வரிசையிலேயே இடம் ஒதுக்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications