கையில் வளையல், நைட் டிரஸில் இருந்த எலும்புக்கூடு! 2 வருடமாக பூட்டியிருந்த வீட்டை திறந்தால் பகீர்!
கொல்கத்தா: சுத்தம் செய்ய ஹவுஸ் ஓனர் வீட்டை திறந்த போது உள்ளே எலும்புக்கூடு இருந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள பாகுயாட்டி என்ற இடத்தில் ஹவுஸ் ஓனர் ஒருவர் தனக்குச் சொந்தமான பிளாட்டை பழுது பார்த்து சுத்தம் செய்யத் திறந்த போது, உள்ளே அவர் பார்த்த காட்சி அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கே உள்ளே ஒரு பெரிய பிளாஸ்டிக் டிரம் சிமெண்ட் மூலம் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதைத் திறந்த போது உள்ளே ஒரு எலும்புக்கூடு இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேபாள ஜோடி: இந்த பிளாட் அங்கே உள்ள ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. கடந்த 2018இல் ஐந்து ஆண்டுக் கால ஒப்பந்தத்தில் நேபாள தம்பதி இந்த பிளாட்டை வாடகைக்கு எடுத்தனர். அந்த ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டைப் பூட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டனர். இருப்பினும், முறையாக வாடகையைக் கொடுத்து வந்ததால் ஓனர் கோபால் முகர்ஜி இது குறித்து பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக வாடகையும் வரவில்லையாம்.
அந்த நேபாள ஜோடியைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும் எந்தவொரு பலனும் இல்லை. இதையடுத்து அந்த பிளாட்டை சுத்தம் செய்து வேறு யாருக்காவது வாடகைக்கு விடலாம் என்று அந்த ஓனர் முடிவு செய்துள்ளார். அதற்காகச் சுத்தம் செய்ய பிளாட்டை திறந்த போதுதான் உள்ளே அந்த பயங்கரமான காட்சியை அவர் பார்த்துள்ளார். உள்ளே இருந்த எந்த எலும்புக்கூடு யார் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியாகவில்லை.
எலும்புக்கூடு: அந்த எலும்புக்கூட்டின் கைகளில் வளையல் இருந்துள்ளது. மேலும், நைட் டிரஸ் ஆடையும் அதில் இருந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார், அந்த எலும்புக் கூட்டின் பாலினம், இறப்பு நேரம், இறப்புக்கான காரணம் ஆகியவற்றை கண்டறிய அதைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேபாளத்தைச் சேர்ந்த அந்த ஜோடிக்கு 35 வயது இருக்கும் என்றும் 5 ஆண்டுகள் அங்கே வாடகைக்கு இருக்க ஒப்பந்தம் போட்டதாகவும் அந்த வீட்டின் ஓனர் கோபால் முகர்ஜி தெரிவித்தார். அந்த நேபாள ஜோடியின் பெயரும் தெரியாதாம். மேலும், அவர்களின் போட்டோ உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் அவர்களின் மொபைல் எண் தகவல்களை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அது இப்போது ஸ்விட்ச் ஆஃப் என வருவதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது: இது குறித்து கோபால் மேலும் கூறுகையில், "சொந்த வேலைக்காக வெளியே செல்கிறோம். ஆனால், சீக்கிரம் வந்துவிடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள்.. மேலும், வாடகையைத் தொடர்ந்து செலுத்துவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். தொடக்கத்தில் வாடகையைச் சரியாகக் கொடுத்தாலும், அதன் பிறகு வாடகை தாமதமாகத் தரத் தொடங்கினார்கள். அதிலும் கடந்த 6 மாதங்களாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. இதன் காரணமாகவே நான் வேறு ஒருவருக்கு வீட்டைத் தர முடிவு செய்தேன்" என்றார்.
வீட்டைச் சுத்தம் செய்ய முடிவு செய்த கோபால் முகர்ஜி இதற்காகச் சிலரை பணியமர்த்தி உள்ளார். வீட்டைப் பூட்டை உடைத்து பிளாட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்த நிலையில், உள்ளே டாய்லெட் அருகில் சீலிடப்பட்ட டிரம்மை கண்டுபிடித்துள்ளனர். சிமெண்ட் மூடியை அவர்கள் உடைக்க முயன்றபோது, டிரம்மில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முகர்ஜி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டிரம்மை உடைத்தனர்.
போலீசார் தகவல்: அப்போது தான் உள்ளே அந்த எலும்புக் கூட்டை கண்டுபிடித்தனர். வளையல், பெண் உடையுடன் அந்த எலும்புக் கூடு இருந்த நிலையில், அது பெண்ணின் உடலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேநேரம் இதை உறுதி செய்யப் பிரேத பரிசோதனை அவசியம் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications