தீ பிடித்ததாக பரவிய வதந்தியே கோர விபத்துக்கு காரணமா? ஜார்கண்ட் ரயில் விபத்தில் பலர் பலியானது எப்படி?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரயில் மோதி பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இருந்து பாகல்பூர் நோக்கி இன்று மாலை பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கலாஜாரியா ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ரயிலில் தீப்பற்றியதாக தகவல் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த பயணிகள் சிலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ரயில் அந்த பயணிகள் மீது மோதியது.

கோர ரயில் விபத்து: இந்த கோர விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் இறப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்துக்குப் பிறகு, இறந்தவர்களின் உடல் பாகங்கள், ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவும், ரயிலின் அடியில் சிக்கிய பயணிகளின் காலணிகள், ஆடைகள் உள்ளிட்டவை தண்டவாளத்தில் சிதறிக் கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலி எண்ணிக்கை அச்சம்: மேலும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் ஆதார் அட்டை ரயில் பாதையில் கிடந்துள்ளது. அதை வைத்து பீகார் மாநிலம் சசரம் பங்கஹா கதிஹாரில் வசிக்கும் மணீஷ் குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், தாபரி ஜாஜா ஜமுயில் வசிக்கும் சிக்கந்தர் குமார் என்பவரும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?: இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என கிழக்கு ரயிலே அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார். பாகல்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் அங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பரவியதாக பரவிய வதந்தியால் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர். தீ விபத்திலிருந்து தப்பிக்க தண்டவாளத்தின் குறுக்கே ஓட முயன்றபோது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலியானவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் என்றும், தீ விபத்து பற்றிய செய்திகளையிம் கிழக்கு ரயில்வே மறுத்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்படவில்லை: வித்யாசாகர் காசிதரில் இருந்து கடந்து செல்லும் ரயில் எண் 12254-ல் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவர் ரயிலில் அடிபட்டுள்ளனர். தீ விபத்து ஏதும் இல்லை. தற்போது, இரண்டு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர் என்று கிழக்கு ரயில்வே அதிகாரி கவுசிக் மித்ரா தெரிவித்தார்.
பயணிகள் ரயிலில் தீப்பிடித்ததாக தகவல் பரவியதை அடுத்து ரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது, மற்றொரு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது.
ஜனாதிபதி இரங்கல்: ஜம்தாரா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். "ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் ரயில் விபத்தில் பலர் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் இரங்கல்: ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ஜம்தாராவின் கல்ஜாரியா ரயில் நிலையம் அருகே ரயில் விபத்துக்குள்ளான சோகச் செய்தி பற்றி பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "இறைவன் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தியடையட்டும், இந்த இக்கட்டான நேரத்தைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கட்டும். நிர்வாகக் குழுவினர் சம்பவ இடத்திலேயே நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நடந்த விபத்தால் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications