20 தமிழர்களைக் கொன்று குவித்த போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: மக்கள் யூனியன் அமைப்பு
ஹைதராபாத்: 20 தமிழக தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஆந்திர தனிப்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ஆந்திர மாநில மக்கள் யூனியன் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் நேற்று ஆந்திர தனிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தங்கள் மீது தாக்குதல் நடத்த தொழிலாளர்கள் முயற்சித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது திட்டமிட்ட என்கவுண்டர் என ஆந்திர எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த பலரும் இதே சந்தேகத்தை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இது தொடர்பாக ஆந்திராவை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய தனிப்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திராவிலேயே எழுந்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகளுக்கான மக்கள் யூனியன் என்ற அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் வி. சுரேஷ் கூறுகையில், ‘‘இதை என்கவுன்டர் என கூறுவது தவறான சொல். உண்மையில் நடந்திருப்பது படுகொலைதான். குற்றச்சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உடனடியாக (தனிப்படையினர் மீது) வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த படுகொலை, வனத்துறையினர் ஒத்துழைப்புடன் காடுகள் அழிக்கப்படுவதை, மக்கள் கண்களில் இருந்து மறைக்க நடந்த சம்பவம்தான்'' எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications