உடலை வருத்தி உழைத்தாவது மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: உடலை வருத்தி உழைத்தாவது கணவர் தன்னை விட்டுப் பிரிந்த மனைவிக்கு உரிய ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, வி. கோபால கவுடா அடங்கிய பெஞ்ச் கூறுகையில்,
பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது கணவனின் கடமை ஆகும். பிரிந்து சென்ற மனைவி பணத்திற்கு வழியில்லாமல் பிச்சை எடுக்காதபடி கணவன்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனின் வீட்டை விட்டு வந்து தவிக்கும் பெண்களின் துயரை புரிந்து கொண்டு விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தை பொறுப்பு, சொத்து உள்ளிட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
கணவர் நல்ல ஆராோக்கியத்துடன் இருந்து தனது உடலை வருத்தி சம்பாதிக்க வேண்டியதாக இருந்தாலும் அவர் பிரிந்த மனைவிக்கு பணம் கொடுக்க வேண்டும். மனைவிக்கு கணவன் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே கணவர் பணம் அளிக்க வேண்டியது இல்லை.
இல்லை எனில் கணவரின் வீட்டில் இருந்தால் அந்த பெண் எப்படி இருந்திருப்பாரோ அப்படி வசதிகளுடன் வாழும் அளவுக்கு அவருக்கு கணவர் பணம் கொடுக்க வேண்டும். கணவரின் சமூக நிலைமையை பார்த்து அவர் மனைவிக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.