ஹைதராபாத்தில் சிறுவனை கொன்றது பற்றி விசாரித்த பிறகு ராணுவ வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ராணுவ பகுதியில் 11 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெஹதிபட்டினத்தில் தனது பெற்றோர், 3 சகோதரர்கள், சகோதரியுடன் வசித்து வந்தவர் செய்யது முஸ்தபா(11). கடந்த 9ம் தேதி அவர் ஹைதராபாத் ராணுவ பகுதியில் மர்மமான முறையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இறப்பதற்கு முன்பு அவர் போலீசாரிடம் கூறுகையில், ராணுவ வீரர்கள் தான் தன்னை எரித்ததாக தெரிவித்தார். ஆனால் சிறுவனை ராணுவத்தினர் யாரும் எரிக்கவில்லை என்று ராணுவம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பு 5 ராணுவ வீரர்களிடம் சிறப்பு குழு விசாரணை நடத்தியது. அதில் அப்பாலா ராஜு என்ற வீரர் இன்று அதிகாலை 4 மணிக்கு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
இது பற்றி ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ராஜுவை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications