ஹைதராபாத்தில் பி.இ. மாணவியை பலாத்காரம் செய்து, மிரட்டிய 2 பேர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை மிரட்டியதற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள பொறியில் கல்லூரியில் படித்து வரும் 22 வயது மாணவி தனது காதலருடன் நகருக்கு வெளியே ஆளில்லாத கட்டிடத்தில் இருந்துள்ளார். அவர்கள் ஒன்றாக இருப்பதை 2 பேர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்ததுடன், புகைப்படமும் எடுத்தனர்.
அந்த இருவரும் அந்த வீட்டுக்குள் நுழைந்து வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த இருவரும் மாணவியின் காதலரை அடித்து விரட்டினர். காதலர் ஓடியபிறகு அந்த இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து மாணவி வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த இருவரும் அவருக்கு போன் செய்து நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் மாணவி போலீசாரிடம் நடந்ததை தெரிவித்து அந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மாணவியை பலாத்காரம் செய்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அந்த இருவரும் இதே போன்ற குற்றங்களை ஏற்கனவே செய்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.