ஒரு மணி நேரத்தில் 1800 செல்பிக்கள்- கின்னஸ் சாதனை படைக்கப் போகும் ஹைதராபாத் இளைஞர்!
ஹைதராபாத்: ஆண்களாலும் செல்பி சிறப்பாக எடுக்க முடியும் என்று கூறியுள்ளார் செல்பியில் சாதனை படைக்க காத்திருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பானு பிரகாஷ் ரச்சா.
இவர் ஒரு மணி நேரத்தில் 1449 செல்பி எடுத்து சாதனை படைத்த பாட்ரிக் பீட்டர்சனின் கின்னஸ் சாதனையை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முறியடிக்க உள்ளார். ஒரு மணி நேரத்தில் 1800 செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைப்பேன் என இவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் வேலை முடித்து விட்டு பஸ்சில் சென்று கொண்டிருந்த பானு பிரகாஷ் மூன்று நிமிடத்தில் 105 செல்பி எடுத்து சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் சாதனை குறித்து அறிந்தார்.

ஆண் நடிகரின் சாதனை:
" ஒரு ஆண் செல்பி எடுத்து சாதனை படைத்துள்ளார். செல்பி எடுப்பது என்பது பெண்களின் வேலை என பலரும் கருதிக்கொண்டிருந்த நிலையில் நடிகர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இது என்னை செல்பியில் சாதனை படைக்கலாம் என்று தூண்டியது" என்கிறார் பானு பிரகாஷ். இதன் பின்னர் வேலைக்கு சென்ற போது சக ஊழியருடன் சேர்ந்து மூன்று நிமிடத்தில் 120 செல்பி எடுத்துள்ளார்.
கின்னஸுக்கு விண்ணப்பம்:
இதன் பின்னர் செல்பி எடுப்பதில் சாதனை படைத்தவர்கள் குறித்து தேடத் துவங்கினார். அதில் பாட்ரிக் பீட்டர்சன் என்பவர் ஒரு மணி நேரத்தில் 1449 செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதை அறிந்தார். இதன் பின்னர் அடுத்த 20 நாளில் தானும் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்து கின்னஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் அனுப்பினார். இதனை கின்னஸ் நிறுவனம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.
வேலையை விட்டு பயிற்சி:
கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சி செய்து வருகிறார். பானு பிரகாஷ் சாதனை படைப்பது குறித்து கூறுகையில், "தற்போது சாதனை படைக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக வைத்துள்ளேன். இதற்காக கடந்த ஐந்து மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டது என்பது குறித்து அறிந்தவுடன் எனது வேலையை துறந்தேன். எனது வேலை நேரம் காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை. வேலையை ராஜினாமா செய்துவிட்டதால் பயிற்சி எடுக்க போதுமான நேரம் கிடைக்கிறது" என கூறினார்.
கேமராவுடனான செல்போன்:
கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் அவரது சகோதரர், பிறந்த நாள் பரிசாக முன்பக்கம் கேமராவுடன் கூடிய செல்போன் வாங்கி கொடுத்தபோது, பானு பிரகாஷூக்கு செல்பி எடுக்கும் எண்ணம் தோன்றியது.
முதல் வேலையாக புகைப்படம்:
"போன் கிடைத்ததும் முதலில் புகைப்படம்தான் எடுத்தேன். அப்போது செல்பி இங்கு பிரபலம் ஆகவில்லை. காலை எழுந்ததும் முதல் வேலையாக புகைப்படம் எடுத்தேன் " என்கிறார் பானு பிரகாஷ் ரச்சா.
1800 கன்பார்ம்:
செல்பி எடுப்பதற்காக தனது கை மற்றும் மணிக்கட்டிற்கு உரிய பயிற்சி எடுத்து வருகிறார். " எனது வலது கையை பயன்படுத்தி செல்பி எடுத்து வருகிறேன். இதற்காக எனது கை மற்றும் முழங்கைக்கு உரிய பயிற்சி எடுத்து வருகிறேன்" என்கிறார் பானு பிரகாஷ். அருகில் உள்ள பள்ளியில் பயிற்சி எடுத்து வரும் அவர், மாணவர்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் 1700 செல்பி எடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களில் ஒரு மணி நேரத்தில் 1800 செல்பி எடுத்து சாதனை படைப்டேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications