ரோகித் வெமுலா தற்கொலையால் அச்சம்.. தலித் மாணவர்கள் 5 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
ஹைதராபாத்: தலித் ஆய்வு மாணவர் ரோகித் தற்கொலை, அதையொட்டி நடைபெற்றுவரும் போராட்டங்களைத் தொடர்ந்து, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் செயற்குழு வியாழனன்று கூடி, 5 தலித் ஆய்வு மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் ரோகித்துக்கும், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக ரோகித் உள்பட 6 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ரோகித் பல்கலைக்கழக விடுதி அறையில் கடந்த ஞாயிறன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் நடக்கும் சாதி அரசியல் பற்றி மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ரோகித் உள்பட 6 மாணவர்கள் மீது துணைவேந்தர் அப்பாராவ் சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்ததாகவும் அதுவே ரோகித் தற்கொலைக்கு காரணம் என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதனால் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி, பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 5வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
இதனிடையே, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெலங்கானா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், ரோகித் தற்கொலையை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் பல்கலைக் கழக வளாகத்தில் நிலவும் அசாதாரண சூழல் ஆகியவற்றை செயற்குழு உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்து அதன் அடிப்படையில் 5 தலித் ஆய்வு மாணவர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து, இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்தனர்.
மேலும், துணைவேந்தர் அப்பாராவ், பல்கலைக் கழக மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்துக்குள்ளேயே தீர்வு காணப்படும், போராட்டம் செய்யும் மாணவர்கள் அமைதி காத்து பல்கலைக் கழகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன், அனைத்து பல்கலைக் கழகங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும், ஆய்வுப்பணிகளும், நிர்வாகப்பணிகளும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications