நெடுவாசல் பகுதி மக்களின் ஐயங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அரசு விளக்கம்
நெடுவாசல் மக்களின் சந்தேகத்தை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: நெடுவாசல் மக்களின் சந்தேகத்தை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான சந்தேகத்தை தமிழக அரசு தீர்க்கும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9ம் தேதி தற்காலிகமாக அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரத்தில் வடகாட்டில் 10ம் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியை அடுத்து நேற்று முன்தினம் போராட்டம் கைவிடப்பட்டது.

நிறைவேற்றாது என உறுதி
இதையடுத்து கடந்த வாரம் டெல்லி சென்ற போராட்டக்குழுவினர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானை சந்தித்து பேசினர். மக்களுக்கு எதிர்ப்பு உள்ள திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என அவர் உறுதியளித்ததாக கூறப்பட்டது.

விவசாயிகள் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் நெடுவாசல், காரைக்கால் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என தகவல் வெளியானது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சந்தேகங்களை தீர்த்த பின்புதான்
இந்நிலையில் நெடுவாசல் மக்களின் சந்தேகத்தை தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தொடங்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வரை அத்திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் பெட்ரோலிய அமைச்சம் விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு தீர்க்கும்
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான சந்தேகத்தை தமிழக அரசு தீர்க்கும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ள நிலையில் மத்திய அரசு இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications