பீகார் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியாவை மோடி இழந்துவிடுவார்: நிதீஷ்குமார் எச்சரிக்கை
பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பில் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவையே இழந்துவிட வாய்ப்புள்ளது என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திரமோடி, ஒரு கூட்டத்தில் பேசும்போது, "2005, ஆகஸ்ட் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதீஷ்குமார், ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கு (முஸ்லிம்கள்) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் இருந்து 5 சதவீதத்தை பறித்து, அந்த ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்ற ஆசையை நிதீஷ் வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் நிதீஷ்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டில் "மோடியின் பிரிவினைவாத பேச்சால் ஆச்சரியம் அடைந்தேன். பீகாரில் தோல்வி முனையிலுள்ள மோடி, வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவையே இழந்துவிடுவார் என நான் அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications