ஒகேனக்கல் எந்த மாநிலத்தில் உள்ளது: புது பிரச்னை கிளப்பும் சித்தராமையா
சாம்ராஜ்நகர்: காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலடியாக ஒகேனக்கல் கர்நாடகத்தில் உள்ளதா அல்லது தமிழகத்தில் உள்ளதா என்பது குறித்து சர்வே எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் சித்தராமையா அங்கு சென்றார். பின்னர் அவர் ஹனூர் அருகே தொட்டிந்துவாடி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு நான் 10 ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன். நடிகர் ராஜ்குமாரை கடத்தியதுபோல என்னையும் கடத்த சந்தன கடத்தல் வீரப்பன் முயற்சிப்பதாக அப்போது தகவல் வெளியானது. அதனால் நான் இங்கு வரவில்லை. மாநிலத்தில் உண்டியல் பணம் அதிகம் கிடைக்கும் கோவில்கள் பட்டியலில் மாதேஸ்வரன் மலை கோவில் 2வது இடத்தில் உள்ளது.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த அணை நிச்சயமாக கட்டப்படும். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அந்த மாநில அரசு தண்ணீர் வினியோகித்து வருகிறது. இதற்கு நாம் தடை எதுவும் கோரவில்லை. ஆனால், மேகதாதுவில் நாம் புதிதாக கட்ட இருக்கும் அணைக்கு அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்து, அணை கட்டுவதை தடுக்க நினைக்கிறார்கள்?
மழைக்காலங்களில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுத்த பிறகும் அதிகளவில் மழைநீர் காவிரி ஆறு வழியாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தான் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட அரசு முயற்சி செய்கிறது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மேகதாது அணையில் இருந்து மாநிலத்துக்கு தேவையான மின்சாரமும், பெங்களூரு நகர மக்களுக்கான குடிநீரும் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இங்கு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆண்டுதோறும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கண்டிப்பாக கொடுக்கும் என்றார்.
புதிதாக கட்டப்படவுள்ள அணைகளால் பெங்களூரு, மைசூரு மாநகர மக்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும் என்றார். மண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் மாவட்டங்களில் கரும்பு சாகுபடிக்கு தேவையான நீர் முழுமையாக கிடைக்கும் என்றும் கூறினார்.
புதிதாக கட்டவுள்ள அணையால் தமிழகமும் பயன் பெறும் என்று குறிப்பிட்ட சித்தாரமையா, தமிழகத்தின் எதிர்ப்பு அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்க்காததை குறிப்பிட்ட சித்தாராமையா தமிழகம் அரசியல் காரணங்களுக்காகவே மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதாக கூறினார்.
ஓகேனக்கல் எம்மாநிலத்தை சேர்ந்தது என்பது குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள 50 ஆண்டு கால பிரச்னையை தீர்க்க கர்நாடக தயாராக உள்ளது என்று கூறிய சித்தாராமையா தமிழகம் ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். கர்நாடக தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் மறு சர்வே நடத்த மத்திய ஆய்வு ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறினார்.
இந்த புது சர்ச்சையால் தமிழகத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளார் சித்தராமையா.












Click it and Unblock the Notifications