அப்துல் கலாம் வழியில் நடப்பேன்.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வழியில் நடப்பதில் பெருமைகொள்வதாக 14வது குடியரசு தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:
நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி வழியில் எனது பணி தொடரும். இவர்கள் நடந்து வந்த பாதையில் நானும் நடப்பது பெரிய பெருமை.
குடியரசு தலைவராக எனது பணியை திறம்பட மேற்கொள்வேன். மிகுந்த பணிவோடு இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தேன். எனது பயணம் மிக நீண்டது. என்னை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் சில கருத்துக்களை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். ஆனால் பிறருடைய கருத்துக்களை கேட்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்திலுள்ள அழகியல். நாம் 21ம் நூற்றாண்டின் பாதியில் உள்ளோம். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, கலாசாரம் ஆகியவற்றை நினைத்து பெருமை கொள்கிறேன். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.