நானும் குஜராத் மருமகன்... ஜனாதிபதி பதவிக்கு துண்டு போடும் 'பொர்க்கி' புகழ் சு.சுவாமி
ஜனாதிபதி பதவி வேட்பாளராக குஜராத் மாஜி முதல்வர் ஆனந்தி பென்னை நிறுத்தலாம் என கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. அதோடு தமக்கும் ஜனாதிபதி ஆசை இருப்பதை அவர் சூசகமாக ட்வீட் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் அதே ஜூலையில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து பாஜக சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறார். அதே போல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட சிலரும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போட்டியிடாத வகையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக ராஜ்யாபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், "ஜனாதிபதி பதவிக்கான சிறந்த வேட்பாளர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலும் ஒருவர். அவர் குஜராத்தியாக இருந்தால் என்ன? நான்கூட குஜராத்தின் மருமகன்தான்" என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறாராம் பொர்க்கி புகழ் சு.சுவாமி!