ஐபி., ரா அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்... காஷ்மீர், பலுசிஸ்தான் விவகாரங்களில் வல்லுநர்கள்!
வெளியுறவு கொள்கைகளை வகுக்கும் அமைப்பான 'ரா' , மத்திய உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் 'ஐபி.', அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
டெல்லி: மத்திய உளவு அமைப்பான ஐ.பி. அமைப்பின் தலைவராக தற்போது பதவி வகிக்கும் தினேஷ்வர் சர்மாவின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.
ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங் எனப்படும் 'ரா' அமைப்பின் தலைவராக பதவி வகிக்கும் ராஜீந்தர் கன்னாவின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனால் அந்தப் பதவிக்கு அனில் குமார் தஸ்மானாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் 2 பேரின் பதவிக் காலமும் 2 ஆண்டுகள் ஆகும்.

ராஜீவ் ஜெயின்
ஐபி அமைப்பின் தற்போதைய தலைவர் தினேஷ்வர் சர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம் இம்மாதம் 31ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து அந்த பதவிக்கு தற்போது உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வரும் ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 1980ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் ஜெயின், பதற்றம் நிறைந்த காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
குடியரசுத்தலைவர் பதக்கம் பெற்றவர்
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சு வார்த்தையில் அரசின் ஆலோசகராக செயல்பட்டவர். ஜனவரி 1ம் தேதியன்று உளவுத்துறையின் தலைவர் பொறுப்பை இவர் ஏற்கிறார்.குடியரசுத்தலைவரின் கையால் பதக்கம் வாங்கியவர் ராஜீவ் ஜெயின்.
ரா அமைப்பு புதிய தலைவர்
ரா அமைப்பின் தற்போதைய தலைவர் ராஜிந்திர கன்னா இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால் அந்த பதவிக்கு அனில் குமார் தஸ்மானாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 'ரா' எனப்படும் வெளியுறவு கொள்கைகளை வகுக்கும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அனில் குமார் தஸ்மானா,1981ஆம் ஆண்டு பேட்ச் மத்தியபிரதேச மாநில கேடரில் இருந்து ஐபிஎஸ் ஆக தேர்வானவர். ரா அமைப்பில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் அனில் குமார் தஸ்மானா
அனில் குமார் தஸ்வானா
தனது பதவிக் காலத்தில், பலுசிஸ்தான், பாகிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை அவர் கையாண்டுள்ளார். ரா அமைப்பின் தலைவராக ஜனவரி 30ம் தேதி பதவியேற்க உள்ளார் அனில் குமார் தஸ்மானா. காஷ்மீர் பகுதியில் வாலட்டும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பலுசிஸ்தான் விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய அரசு, ரா அமைப்புக்கு அந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றிய அனில் குமார் தஸ்மானாவை தலைவராக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் சரியான தேர்வு
இது குறித்து நமது ஒன் இந்தியா நிருபரிடம் கருத்து கூறிய ரா அமைப்பின் அதிகாரிகள், சரியான நேரத்தில் சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளில் கடினமான காலங்களில் பணியாற்றிய அனில் குமார் தஸ்மானா ரா அமைப்பின் தலைவராகியிருக்கிறார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications