கொலை பட்டியலில் உள்ளவர்களுக்கு விஷ கடிதங்களை அனுப்ப இந்திய முஜாகிதீன் திட்டம்!'
டெல்லி: தங்களது கொலை பட்டியலில் உள்ளவர்களை கொல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷம் தோய்த்த கடிதங்களை அனுப்ப இந்திய முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டிருந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சட்டவிரோதமாக ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைத்த வழக்கில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தது தொடர்பான வழக்கில் அவர்கள் 6 பேர் மீதும் துணை குற்றப்பத்திரிகை ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று தாக்கல் செய்தனர்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் தெசின் அக்தர், முகமத் அசார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தங்களது கொலைப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சல்பேட், ஆமணக்கு விதை உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட விஷ கலவையில் தோய்த்த கடிதங்களை அனுப்பி கொல்ல திட்டமிட்டதாக கூறினர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் தெரிவித்த விஷ கலவையை முகமத் அசாரின் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications