இந்தியாவின் "செவ்வாய் கிரகப் பிரவேசத்திற்கு" இன்னும் 2 நாட்களே.... பரவசத்தில் இந்தியர்கள்!
பெங்களூர்: உலகமே இந்தியா மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலம், இன்னும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் பிரவேசிக்கவுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய சாதனையாகும். அதை விட முக்கியமாக, சீனாவை இந்த விஷயத்தில் இந்தியா தோற்கடிக்கப் போகிறது என்பதுதான்.
எப்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தரை மார்க்கத்தில் கடும் போட்டி நிலவுகிறதோ அதேபோல விண்வெளிக்கு அப்பாலும் இரு நாடுகளும் கடுமையான போரில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. அதில் தற்போது செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவை தோற்கடிக்கிறது இந்தியா.
முதல் ஆளாக நுழையும் இந்தியா
சீனாவை முந்திக் கொண்டு இந்தியா முதல் ஆளாக தனது செவ்வாய் கிரக பயணத்தை வெற்றிகரமாக்கப் போகிறது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும்.
ஆசிய சாதனை
இந்தியாவின் மங்கள்யான், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்து விட்டால் அது மிகப் பெரிய ஆசி சாதனையாகவும் மாறும்.
முதல் ஆசிய நாடு
அதாவது செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் ஆசிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.
தோற்றுப் போன சீனா, ரஷ்யா, ஜப்பான்
இதற்கு முன்பு 2011ம் ஆண்டு சீனா தனது யிங்குயோ 1 என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல ரஷ்யாவும் 1998ம் ஆண்டே போபோஸ் கிரன்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதுவும் தோல்வியில் முடிந்தது. அதபோல ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து போனதால் தோல்வியில் முடிந்தது.
சாதனை மங்கள்யான்
இந்தியா தனது மங்கள்யான் விண்கலத்தை வெறும் 15 மாதங்களில், மிகக் குறைந்த பொருட் செலவல் உருவாக்கியது என்பதுதான் விசேஷமே. வேறு எந்த நாடும் தனது செவ்வாய் திட்டத்துக்காக இவ்வளவு குறைந்த செலவை செய்ததில்லை. எனவே அந்த வகையிலும் மங்கள்யான் ஏற்கனவே சாதனை படைத்து விட்டது.
முதல் முயற்சியிலேயே வென்ற முதல் நாடு
மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் நாடாகவும் இந்தியா உருவெடுக்கும் என்பது இன்னொரு பெருமிதமாகும்.