மேற்கு வங்கத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கிய நிர்வாகம்
பிஷாம்பூர்: மேற்கு வங்க மாநிலம் பிஷாம்பூரில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து நீக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகு வங்க மாநிலம் பிஷாம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தெற்கு பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் படித்து வந்தான். அவனது தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரை அவர் அந்த பகுதியில் எழுது பொருள் அங்காடி நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து அவருடைய மனைவிக்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதைக் குறைத்தனர். இதனால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த கடையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றார்.
இதனையடுத்து, தங்களது 7 வயது மகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக, பள்ளிக்கு அவ்வப்போது விடுப்பு எடுத்துள்ளான். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சிறுவனின் பெற்றோர்களை அழைத்து காரணம் கேட்ட போது, அவன் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த மாணவனை இனி பள்ளிக்கு வரவேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அந்த சிறுவனின் பாட்டியை அழைத்து, அவரையும் எயிட்ஸ் நோயை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை செய்யுமாறு தலைமையாசிரியர் சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலைமையாசிரியாரை அழைத்து விளக்கம் கேட்ட போது, பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால், அந்த பையனை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு அனுமதித்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் கூரியதனாலேயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை எச்சரிக்கை செய்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications