ஆந்திராவை பிரித்தால் "சீமாந்திரா" தனி நாடு கோருவோம்: மிரட்டும் தெலுங்கு தேசம்!
ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்தால் சீமாந்திரா பகுதியை தனி நாடாக்க கோரி போராடுவோம் என்று தெலுங்குதேசம் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இதனை எந்த வகையிலும் தடுப்பது என்பதில் சீமாந்திரா எம்.பிக்கள் உறுதியாக உள்ளனர்.
இதன் உச்சமாகத்தான் நாடாளுமன்ற லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கலைத் தடுக்க மிளகு பொடி வீசப்பட்டது. இந்நிலையில் சீமாந்திரா எம்.பிக்களின் உணர்வுகளை மதிக்காமல் போனால் தனிநாடு கோருவோம் என்று தெலுங்குதேசம் மிரட்டல் விடுத்துள்ளது.
இது குறித்து தெலுங்குதேசம் எம்.பி வேணுகோபால் ரெட்டி கூறியதாவது: பாகிஸ்தான், வங்கதேசத்தைப் போல சீமாந்திராவையும் தனிநாடாக்குங்கள். எங்களது உணர்வை இந்திய நாடாளுமன்றம் மதிக்கவில்லை. அப்படியெனில் நாங்களே எங்களுக்கான நாடாளுமன்றத்தை உருவாக்குவோம்.
எங்கள் உணர்வுகளை மதிக்காத போது நாங்கள் தனிநாடு கோருவது எப்படி தவறாக முடியும்? 5 கோடி சீமாந்திரா மக்களின் கவலைகளை சோனியா காந்தி மதிக்காதது இனப்படுகொலைக்கு சமமானது.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
இதனிடையே ஃபேஸ்புக்கில் சீமாந்திரா தனிநாடு கோரும் இயக்கத்துக்கான பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.