Awantipora Attack: காஷ்மீர் தாக்குதல்... தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம்
Recommended Video
ஜம்முகாஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் சுப்ரமணியன் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களில், ஒருவரது உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.
மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்... அந்த தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் தாக்குதலில் பலியாகி உள்ளார். அவரது இறப்பு செய்தி கேட்டு... சுப்ர மணியனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலக்கத்தில் உள்ளனர்.
சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியனின் வீரமரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தூத்துக்குடி மாவட் ஆட்சியரகம், மாவட்ட நிர்வாகத்துக்கு இது குறித்து எவ்வித தகவல்களும் வரவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நிகழ்ந்த அன்று மதியம் தமது குடும்பத்தினருடன் அவர் செல்போனில் பேசியிருக்கிறார். அதன் பிறகு... அவரது செல்போன் அனணத்து வைக்கப்பட்டு இருக்கிறது.சுப்ரமணியனுடன், மற்றொரு தமிழக வீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை