ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரிதுறை அதிகாரி கைது
ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 24 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் வினய்குமார். அவர் ஆய்வுக்கு சென்ற போது ஒருவரிடம் வருமான வரி தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி, அதற்காக தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் அந்த நபர், வினய் குமாரிடம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.
அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், வினய் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ 24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினய் குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications