தென் சீனா கடல் பஞ்சாயத்து... சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்சுடன் கை கோர்த்த இந்தியா!!
டெல்லி: தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்கா போர்க் கப்பல் நுழைந்ததால் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் சீனாவுக்கு எதிராக பிலிபைன்சுடன் இந்தியா கை கோர்த்திருக்கிறது.
தென் சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா. அத்துடன் 2 செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கி விமான தளங்களையும் அமைத்துள்ளது சீனா.

ஆனால் தென் சீனா கடற்பரப்பை ஒட்டிய பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனே, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த கடற்பரப்பு தங்களுக்கும் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. இதில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வியட்நாமுடன் இணைந்து தென்சீனா கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை இந்தியா மேற்கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் தென் சீனா கடல் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும் தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் கைப்பற்றுவதில் சீனா முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிரடியாக தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்துள்ள செயற்கை தீவுகளுக்கு அருகே அண்மையில் அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவானது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தென்சீனா கடற்பரப்பு விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார். பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல்பர்ட் ஃப் டெல் ரொசாரியோவும் சுஷ்மா ஸ்வராஜூம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் சீனா கடற்பரப்பு என்பதற்கு பதிலாக மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பரப்பு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
தென்சீனா கடற்பரப்பை இப்படி மேற்கு பிலிப்பைன் கடற்பரப்பு என இந்தியா குறிப்பிடுவது இதுதான் முதல் முறையுமாகும். இந்திய பெருங்கடல் பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அதிகளவில் நடமாடுவதற்கான பதிலடியாக இந்தியாவின் இந்நடவடிக்கை கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications