தேவ்யானி கைதை ஊடகங்கள் திசை திருப்பிவிட்டன: பணிப்பெண் சங்கீதா வேதனை
நியூயார்க்: இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் வேறு மாதிரியாக திசை திருப்பி விட்டன என குற்றம் சாட்டியுள்ளார் தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு.
விசா மோசடி வழக்கில் இந்தியப் பெண் தூதர் தேவ்யானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து தனது வேதனையைத் தெரிவித்துள்ளார் அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு.

இது குறித்து அவரது வக்கீல் டானா சூஸ்மேன் கூறுகையில், ‘‘இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது'' என்றார்.
மேலும், அவர், ‘‘தேவ்யானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘‘இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்'' என்றார்.












Click it and Unblock the Notifications