இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது!
ஏற்கனவே ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டு வெளியேற்றம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் சோதனையாக அமைந்த நிலையில் மேலும் ஒரு பிரச்சனை நாட்டை தலைகீழாக புரட்டிப்போடும் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் பெருங்கடல் யாரும் எதிர்பார்க்காத வரையில் வெப்பமடையும் எல் நினோ நிகழ்வு இந்த ஆண்டு வலுவாக உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பருவமழை 6 சதவீதம் குறைவாக பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

பருவமழை ஏன் முக்கியம்
இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 70 சதவீதம் பருவமழையிலிருந்து வருகிறது. நாட்டின் 60 சதவீத விவசாயிகள் முழுமையாக பருவமழையை நம்பியே இருக்கின்றனர். எனவே, மழை பெய்வதில் குறைவு ஏற்பட்டால் பயிர் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படும்.
1951 முதல் எல் நினோ ஆண்டுகளில் சுமார் 60 சதவீத நேரங்களில் இந்தியாவில் குறைவான மழை பதிவு செய்துள்ளது. 2009-ம் ஆண்டு மழைப்பொழிவு தனது இயல்பான மழை பொழிவை விட 78 சதவீதம் மட்டுமே பதிவானது. இது கடந்த 37 ஆண்டுகளில் மிக மோசமான ஆண்டாகப் பதிவானது. இதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.
விவசாயம் மற்றும் உணவு விலை பாதிப்பு
பருவமழை குறைவு பயிர் உற்பத்தியை பாதிக்கும். இதனால் உணவு பொருட்களின் விலை உயரும். குடும்ப பட்ஜெட்டில் உணவு செலவு என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கும் காரணத்தால் உணவு பொருட்களின் விலை உயர்ந்தால் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, உணவு விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். இது பொருளாதாரத்தில் பணவீக்கத்தை அதிகரிக்கும்.
ஹார்முஸ் நீரிணை மூடல் - எரிபொருள் நெருக்கடி
இதோடு, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் இந்த வழியில் தான் நடைபெறுகிறது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 முதல் 90 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 40 முதல் 50 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது.
இதன் விளைவாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்திய கச்சா எண்ணெய் கூடை சராசரியாக 114 டாலராக இருந்தது. மே மாதத்தில் 106 டாலராகக் குறைந்திருந்தாலும், இன்னும் உயர் அளவிலேயே உள்ளது. இந்த நெருக்கடி நீண்டகாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் ரிசர்வ் வங்கி சவால்
உணவு மற்றும் எரிபொருள் விலை ஒரே நேரத்தில் உயர்ந்தால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். இது கடன் சுமையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும், இது நேரடியாக முதலீட்டு சந்தையை பாதிக்கும்.












Click it and Unblock the Notifications