இந்தியா கடன்கார நாடு மட்டுமல்ல.. கடன் கொடுக்கிற தேசமும் கூட.. இந்த பட்டியலை பாருங்க!
டெல்லி: நாடு வாங்கியிருக்கும் கடனைப் பற்றி பேசாத அரசியல் தலைவர்களும் இல்லை.. அது இடம்பெறாத மேடைகளும் இல்லை.. ஆனால் இந்தியா கடன் வாங்குவதுடன் கடனையும் அள்ளிக் கொடுக்கிற தேசம் என்பதைத்தான் நாம் பேசுவதே கிடையாது.
அரசியல் சார்ந்த திரைப்படங்கள் பெரும்பாலானவற்றில் நாடு வாங்கியிருக்கும் கடனை மையமாக வைத்து வசனங்கள் இருந்தே தீரும். வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பதெல்லாம் கூட யோசனைகள் 'தூள்' பறக்கும்..
ஆனால் இந்த தேசம் பல்லாயிரம் கோடி ரூபாயை பல நாடுகளுக்கு கடனாகவும் கொடுக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

ரூ9,478 கோடி
நடப்பாண்டில் இந்தியா வெளிநாடுகளுக்கு கடனாக கொடுக்க இருக்கும் தொகை தோராயமாக ரூ9,478 கோடி.

பூட்டானுக்கே அதிகம்
இந்த ரூ9,478 கோடியில் ரூ6,074 கோடியும் எந்த நாட்டுக்குப் போகிறது தெரியுமா? குட்டி தேசமான பூட்டானுக்குத்தான்.. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருப்பதால் இந்தியாவுக்கு மிக முக்கியமான எல்லை நாடு. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் அவர் சென்ற முதல் நாடும் பூட்டான் என்பதை நினைவில் கொள்வோம்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானுக்கு ரூ676 கோடியை இந்தியா கொடுக்கிறது. ஏனெனில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை இந்தியா எளிதில் பெறவும் பாகிஸ்தானில் சீனா செலுத்தி வரும் மேலாதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் ஆப்கானிஸ்தானுக்கு நிதி கொடுக்கிறது இந்தியா.

இலங்கை
இந்தியாவிடம் நிதி உதவி பெறும் நாடுகளில் மூன்றாவது இடம் இலங்கைக்கு. இலங்கையிலும் சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்ப்புகளை மீறி ரூ500 கோடி நிதி கடனாக வழங்கப்படுகிறது.

நேபாளம்
மற்றொரு அண்டை நாடான நேபாளத்துக்கு 450 கோடியை கொடுக்கிறது இந்தியா.

ஆப்பிரிக்க நாடுகள்
ஏராளமான இயற்கை வளம் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணற்ற இந்திய நிறுவனங்கள் கால்பதித்துள்ளன. அங்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும்தான் போட்டி. இந்த போட்டியில்தான் ஆப்பிரிக்க நாடுகளுக்காக ரூ350 கோடியை கடனாக கொடுக்கிறது இந்தியா.

வங்கதேசம்
மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்துக்கு ரூ350 கோடி, தீவு நாடான மாலத்தீவுக்கு ரூ183 கோடி, மியான்மருக்கு ரூ180 கோடி இந்தியா கொடுக்க இருக்கிறது.

இதர நாடுகள்..
இதர வளர்ந்து வரும் நாடுகளுக்கு ரூ122.87 கோடி, யுரேசியா நாடுகளுக்கு ரூ40 கோடி, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ரூ30 கோடி, மங்கோலியாவுக்கு ரூ2.5 கோடி என இந்தியாவும் கடன் வழங்குகிற தேசமாக திகழ்கிறது.












Click it and Unblock the Notifications