எபோலா பீதி: விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு
டெல்லி: எபோலா வைரஸ் பரவுவதை எப்படி தடுப்பது என்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் பரவி வரும் வேளையில் அதை தடுப்பது குறித்த தகவல்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அளித்துள்ளது. சர்வதேச சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
பயணிகள் யாருக்காவது எபோலா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அது குறித்து தெரிவிக்க வேண்டும்
பயணிகள் கடந்த 21 நாட்களில் எபோலா வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு சென்று வந்திருந்தால் அது குறித்த தகவல்களை சமர்பிக்க வேண்டும். மேலும் அந்த நாட்டில் இருந்து திரும்பிய பிறகு எபோலா அறிகுறி இருந்ததா என்பதை தெரிவிக்க வேண்டும்
எபோலா வைரஸ் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தாலோ அல்லது அங்கு தங்கியிருந்துவிட்டு வந்தாலோ அந்த பயணிகளின் விவரங்களை விமான நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்.
எபோலா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வந்தால் அவர் விமான நிலையத்தை அடையும் முன்பு அது குறித்த தகவலை இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் எபோலா தாக்குதல் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு எபோலா காய்ச்சல் இல்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தான் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு மேற்கூறிய உத்தரவை விடுத்துள்ளது.