இந்தியா - மலேசியா இடையே விமான சேவை உள்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லி: இந்தியா - மலேசியா இடையே தொழில், இளைஞர் நலன், விமானச் சேவை உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமிது அன்சாரி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது மலேசியா-இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், விமான சேவை, இளைஞர் நலன், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்துக்கு எதிராக மலேசியா போராடி வருவது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. பொருளாதார மேம்பாட்டை வெற்றிகரமாக இணைந்து உருவாக்குவோம் என்று குறிப்பிட்ட மோடி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையே உணவு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக தனது பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதன் பின்னர் போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications