இந்தியா - பாக்., பாதுகாப்பு படை இயக்குநர்கள் இடையேயான பேச்சுவார்த்தை - டெல்லியில் நடக்கிறது!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவுகிறது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டது. ஆனால், காஷ்மீர் பிரிவினைவாதிகள் தொடர்பான சர்ச்சையால் கடைசி நேரத்தில் பேச்சு ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கான பொது இயக்குனர்கள் இடையில், இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதற்காக பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் மேஜர் ஜெனரல் உமர் பரூக் பர்கி தலைமையில், 16 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு வாகா எல்லை வழியாக வந்தனர். பின்னர் அவர்கள், சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல், இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் தலைமையில், 23 பேர் கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், குர்தாஸ்பூர், உதம்பூர் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள், பாகிஸ்தான் தீவிரவாதி இந்தியாவில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்திய தரப்பில் எழுப்பப்பட உள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது, போதை மருந்து கடத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்தியா கேள்விகளை எழுப்பும் எனத் தெரிகிறது. அதேபோன்று, இந்திய ஆளில்லா விமான பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது உள்ளிட்டவைகள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் பேச திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதுபோன்ற கூட்டம் 2013 டிசம்பரில், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications