இந்தியா- பாக். வெளியுறவுத் துறை செயலர் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நாளை ஜனவரி 15-ந் தேதியன்று இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்களிடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதன்கோட் விமானப் படை மீது பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியானது.
இந்த சூழலில், பதன்கோட் தாக்குதலின் சூத்ரதாரியாக கருதப்படும் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அஸாரை பாகிஸ்தான் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் இது குறித்த தகவல்கள் குழப்பமானதாக இருந்து வருகிறது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதன்கோட் விவகாரத்தில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இப்பேச்சுவார்த்தையும் இருக்கக் கூடும்.
தற்போது பாரீஸில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாடு திரும்பிய பின்னரே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடனான பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications