தாவூத் 'கதையை முடிக்க' சோட்டா கோஷ்டிக்கு ரகசிய பயிற்சி கொடுத்த இந்தியா- ஆர்.கே. சிங் பரபரப்பு தகவல்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரகசிய திட்டம் தீட்டப்பட்டது; இதற்காக தாவூத்தின் எதிரியான சோட்டா ராஜனின் கோஷ்டிக்கு மகாராஷ்டிராவில் ரகசிய பயிற்சி அளிக்கப்பட்டது என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
1993-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி மும்பை நகரில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 275 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு தீவிரவாதி தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டனர். இவர்களில் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை இந்தியா உறுதி செய்து இருக்கிறது. ஆனால் அவர் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
வாஜ்பாய் ஆட்சியில்..
இந்தநிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது மத்திய அரசு சார்பில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பரபரப்பு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
சோட்டா ராஜன் கோஷ்டி மூலமாக..
தற்போது பா.ஜ.க.வில் உள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தாவூத் இப்ராகிமை கொல்வதற்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித்தோவல் அப்போது இந்திய உளவுத் துறையின் தலைவராக இருந்தார்.
இந்தியாவின் ரகசிய திட்டத்தின்படி தாவூத் இப்ராகிமின் பரம எதிரியான சோட்டா ராஜன் கும்பலுக்கு பயிற்சி அளித்து தாவூத் இப்ராகிமை கொல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் தாவூத் இப்ராகிம் கும்பலை தனித்தனியாக துண்டிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.
ரகசிய பயிற்சி
இதைத் தொடர்ந்து இந்த திட்டங்களை நிறைவேற்ற சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த சிலர் பயிற்சிக்கு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மகாரஷ்டிரா மாநிலத்துக்கு வெளியே ரகசியமான இடத்தில் வைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.
குழப்பிய மகா. போலீசார்
ஆனால் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளில் சிலர் இந்த திட்டத்தை சீர்குலைத்துவிட்டனர். இந்த அதிகாரிகள் கைது வாரண்டுகளுடன் பயிற்சி நடக்கும் முகாம்களுக்கு சென்று அங்கு இந்தியாவின் சார்பில் பயிற்சி பெற்ற சோட்டா ராஜன் கும்பலிடம் குழப்பத்தை ஏற்படுத்தினர். மும்பை போலீசில் ஒழுக்கம் இல்லாத, ஊழல் போலீஸ் அதிகாரிகள் சிலரால் இந்த ரகசிய திட்டமே பாழாகிப்போனது.
பின்லேடனையும், முல்லா உமரையும் எப்படி அமெரிக்க ராணுவம் ரகசிய நடவடிக்கை மூலம் கொன்றதோ அதேபோல தாவூத் இப்ராகிமை கொல்ல இந்தியாவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு ஆர்.கே.சிங் கூறினார்.