வெயில் ஓவரா இருக்கு.. வெளில வராதீங்க.. முன்கூட்டியே எச்சரிக்க வருகிறது புதிய கருவி
டெல்லி: உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், அதிகரிக்கும் வெப்ப அளவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய வெயில் எச்சரிக்கை கருவியை நிறுவ இருக்கிறது மத்திய அரசு.
காடுகளை அழித்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதால், எதிர்கால சந்ததிக்கு மட்டுமல்ல, வாழும் காலத்திலேயே பல்வேறு இடர்களைச் சந்தித்து வருகிறது மனித குலம்.
மழை காலத்தில் வெள்ளத்தால் அழிவும், கோடையில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியும் என தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொளுத்தும் வெயில்...
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை மார்ச் மாதமே தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

2300 பேர் பலி...
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடுமுழுவதும் வெயிலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,300ஐ தாண்டியது. இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது.

2000ம் ஆண்டில்...
காரணம், ஆண்டுதோறும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான். கடந்த 2000ம் ஆண்டு 534ஆக இருந்த வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 2001ல் மட்டும் 505ஆக குறைந்தது.

அதிரடியாக உயர்வு...
ஆனால், அதனைத் தொடர்ந்து அதிரடியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2013, 14ம் ஆண்டுகளில் முறையே 1216 மற்றும் 1248 என இருந்த வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு அதிரடியாக 2300 ஆனது.

இயற்கை ஆர்வலர்கள்...
இது அரசு தரும் கணக்கு மட்டுமே. இது தவிர கணக்கில் வராத மரணங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

எச்சரிக்கை கருவி...
இதனால், இனி வரும் ஆண்டுகளில் வெயிலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, நாட்டு மக்களைக் காக்க, சுனாமி எச்சரிக்கை கருவியைப் போல், வெப்ப எச்சரிக்கை கருவியையும் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்...
முதல்கட்டமாக அடுத்தவாரத்தில் வெயிலால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

அமெரிக்க நிறுவனத்தின் உதவியோடு...
நியூயார்க்கில் உள்ள நேச்சுரல் ரிசோர்ஸ் டிபன்ஸ் கவுன்சில் உதவியோடு, இந்திய அரசு இந்தக் கருவிகளை பொருத்துகிறது. இதன்மூலம் தினமும் வெயிலின் அளவு முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படும்.

தற்பாதுகாப்பு...
இதன்மூலம் அதிக வெப்பத்தை கக்கும் நாட்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மக்கள், அன்றைய தினம் முடிந்தவரை வெளியில் சுற்றாமல், அல்லது தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் போன்றவற்றால் தங்களை வெயிலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இயலும்.












Click it and Unblock the Notifications