மங்கள்யான் விண்கலத்தின் ஆயுட்காலம் நீட்டிப்பு - இஸ்ரோ
பெங்களூரு: மங்கள்யான் விண்கலத்தின் ஆயுட் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தை நோக்கி 10 மாதங்கள் நீண்ட பயணம் மேற்கொண்டது. பின்னர், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டது.
இதன் மூலம், முதல் முயற்சியிலே செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இணைத்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
அப்போது முதல் செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை மங்கள்யான் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், மங்கள்யானின் செயல்பாடுகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பலவீனமடைய வாய்ப்பிருப்பதாகக் கருதப் பட்டது. ஆனால், தற்போது மங்கள்யானில் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலாக காணப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அதன் ஆயுட்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களுக்கு கூடுதலாக செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை மங்கள்யானில் இருந்து நாம் பெற முடியும் என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப சூழல், நீர் ,நில ஆதாரங்கள் ஆகியவை குறித்து மேலும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மங்கள் யான் விண்கலத்தில் உள்ள 4 முக்கிய கருவிகள் அங்கு மீத்தேன், ஹைட்ரஜன் வாயு குறித்த சோதனையை தொடர்ந்து மேற் கொள்ளும். அதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.