இந்தியாவின் ஒரே கொரில்லா.. போலோ.. தனிமை வேதனையால் மரணம்!
மைசூர்: இந்தியாவில் இருந்த ஒரே ஒரு கொரில்லா குரங்கான போலோ, மைசூர் சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்காவில் மரணமடைந்தது. அதற்கு வயது 43.
மிகவும் வயதான போலாதான், இந்தியாவில் இருந்து வந்த ஒரே கொரில்லா ஆகும்.
வயது முதிர்ந்த நிலையில் இருந்து வந்த இந்த கொரில்லா, நோய்த் தொற்று மற்றும் சுவாசத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு போலோ மரணமடைந்தது.
கடந்த 15 நாட்களாகவே இது சீரியஸ் நிலையில் இருந்து வந்தது. தனிமையிலேயே வசித்து வந்தது இந்த கொரில்லா. இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் தனிமையே அதன் முடிவுக்கு முக்கியக் காரணம்.
கடந்த 1995 ஆம் ஆண்டு அயர்லாந்திலுள்ள டப்ளின் விலங்கியல் பூங்காவிலிருந்து, மைசூருக்கு போலோ கொண்டு வரப்பட்டது. அன்று முதலே இது தனிமையில்தான் வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ மனிதர்கள் குரங்குகளைப் போல நிலையில்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், இந்த கொரில்லா மனிதர்களைப் போல தனிமையின் வேதனையில் தவித்து கடைசியில் உலக வாழ்க்கையை விட்டு நீங்கியுள்ளது முக்கியமானது.