இந்தியா வேண்டாம்: தாய்நாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டில் குடியேறிய 61,000 பணக்காரர்கள்
டெல்லி: கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும்பணக்கார இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வருவது தெரிய வந்துள்ளது.
நியூ வேர்ல்ட் வெல்த் என்ற நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு அதிக அளவில் வெளியேறி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

61,000 பேர்
கடந்த 14 ஆண்டுகளில் 61 ஆயிரம் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். அதே சமயம் சீனாவில் இருந்து 91 ஆயிரம் பணக்காரர்கள் வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.

அமெரிக்கா
இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் குடியேறுகிறார்கள். சொந்தநாட்டில் நடக்கும் பிரச்சனைகள், பாதுகாப்பு காரணம் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகிய காரணங்களுக்காக இந்திய பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

வாழ்க்கைத்தரம்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம் மற்றும் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் வரி செலுத்தும் தொகை குறைவு என்பதால் இந்தியர்கள் அங்கு செல்கிறார்கள்.

8 நாடுகள்
கடந்த 14 ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறிய இந்திய பணக்காரர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், அமீரகம், கனடா மற்றும் துருக்கியில் குடியேறியுள்ளனர். அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications