அச்சுறுத்தும் சீனாவின் ராட்சத அணை.. பதிலுக்கு புதிய அணை கட்ட தொடங்கிய இந்தியா.. பின்னணி
இடாநகர்: இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது. இந்த அணையால் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் சீனாவின் அணை திட்டத்துக்கு பதிலடியாக அருணாச்சல பிரதேசத்தில் ரூ.17,069 கோடியில் புதிய அணை கட்டும் பணியை நம் நாடு தொடங்கி உள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இப்போது இருநாடுகள் இடையே ஓரளவு உறவு வலுப்பெற தொடங்கி உள்ளது. இருப்பினும் மோதல் இருந்த காலத்தில் நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீனா பிரமாண்டமான அணை கட்ட திட்டமிட்டு அதற்கான பணியை தொடங்கி உள்ளது.

அதாவது தென்கிழக்கு திபெத்தில் கைலாய மலையில் பிறக்கும் பிரம்மபுத்திரா நதி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நதி சீனாவில் ‛யார்லங் சாங்கோ' எனவும், நம் நாட்டில் பிரம்மபுத்திரா எனவும், வங்கதேசத்தில் ஜமுனா நதி எனவும் அழைக்கப்படுகிறது. திபெத்தில் பிறந்து சீனா, இந்தியா, வங்கதேசத்தை வளமாக்கி இந்த நதி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்று. மொத்தம் 2,900 கிலோமீட்டர் வரை இந்த நதி ஓடுகிறது.
இதற்கிடையே தான் சீனா அருணாச்சல பிரதேசத்தின் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் பிரமாண்ட அணையை கட்டி வருகிறது. அணை கட்டும் திட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் சீனா ஒப்புதல் வழங்கியது. இந்த அணையின் பட்ஜெட் 1.2 டிரில்லியன் யுவான். இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடியாகும்.
இவ்வளவு மதிப்பில் இந்த அணையை நீர்மின் திட்டத்துக்காக சீனா கட்ட உள்ளது. இங்கு மொத்தம் 5 நீர்மின் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த அணையின் காரணமாக நதியின் நீரோட்டம் தடுத்து நிறுத்தப்படும். இது நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலமாக பிரம்மபுத்திராவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காது. அதேவேளையில் கனமழை பெய்யும்போது சீனா அதிகமான தண்ணீரை அணையில் இருந்து திடீரென திறந்து விடலாம். இது நம் நாட்டில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி வடகிழக்கு மாநிலங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
இதனால் நம் நாடு இந்த அணைக்கட்டும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் சீனா கண்டுக்கொள்ளாமல் அணையை கட்ட தொடங்கி உள்ளது. அதாவது சீனாவின் ராட்சத அணையில் திடீரென்று அதிகளவில் தண்ணீர் திறந்தால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நம் நாடு அணை கட்டுகிறது.
இந்த அணை அருணாச்சல பிரதேசத்தின் திபாங் மாவட்டத்தில் அமைகிறது. கடந்த ஆண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திபாங் பல்நோக்கு திட்டத்தின் கீழ், பிரம்மபுத்திராவின் முக்கிய துணை நதியான திபாங்கில், 2,880 மெகாவாட் திறனுடைய ஒரு பெரிய நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அதற்கான பணி தொடங்கி உள்ளது. அணை கட்டும் பணியை, தேசிய நீர்மின் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த அணை 912 அடி உயரத்தில் மிகப்பெரிய அணையாக அமைய உள்ளது. ஆண்டுக்கு 11,223 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அணை கட்ட, 17,069 கோடி ரூபா ய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சீனா கட்டும் அணை 2032ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் நிலையில் அதற்கு முன்பாக இந்த அணையை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications