மியான்மரில் இந்திய விமானப் படை சிக்னல்களை நடுவானில் வழிமறித்து சைபர் அட்டாக்- சீனாவின் சேட்டைதானே?
டெல்லி: நிலநடுக்க பேரழிவால் உருக்குலைந்த மியான்மர் நாட்டில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் அட்டாக் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்திய விமானப் படை விமானம் நடுவானில் பறந்த போது, சிக்னல்கள் மீது சைபர் அட்டாக் நடத்தி பொய்யான தகவல்களை வழங்கியதை உரிய நேரத்தில் விமானிகள் கண்டு உஷாரானதால் விபரீதங்கள் நிகழவில்லை எனவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நமது அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் இறுதியில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மர் நாட்டையே உருக்குலைத்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்தின. இந்த நிலநடுக்க பேரழிவில் சுமார் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து உலகிலேயே முதல் நாடாக நமது நாடுதான் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் களமிறங்கி பணியாற்றி வருகிறது. ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் அதிநவீன கருவிகளுடன் மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மற்றொரு அண்டை நாடான சீனா, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மியான்மரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நமது இந்திய விமானப் படையினரின் சிக்னல்களை நடுவானில் வழிமறித்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானிகளுக்கு பொய்யான தகவல்கள் கிடைக்க தொடங்கின. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களை பயன்படுத்தி நிஜ தகவல்களை பெற்றனர். இதன் மூலம் நடுவானில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலையும் நமது பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்திய விமானப் படையினரை திசைதிருப்பும் வகையிலான இந்த சைபர் தாக்குதலை சீனாதான் செய்திருக்க முடியும் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வலலுநர்கள். இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications