"எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்"- பாகிஸ்தானுக்கு ஜெட்லி எச்சரிக்கை
ஸ்ரீநகர்: எல்லையில் ஊடுருவலை தடுக்க இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
இந்தியாவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை பிரதமர் நரேந்திரமோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். கோவா மாநிலத்தின் அரபிக்கடல் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லியும் பங்கேற்றார். இதன்பிறகு ஜெட்லி ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு வருகை தந்தார்.
அங்கு நிருபர்களிடம் ஜெட்லி கூறியதாவது: எல்லையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக நான் காஷ்மீர் வந்துள்ளேன். இங்கு உயர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது குறித்து நிருபர்கள் ஜெட்லியிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெட்லி, "இதுபோன்ற அத்துமீறும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க நமது ராணுவம் பலமான நிலையிலும், உரிய ஆயுதங்களுடனும் தயாராக உள்ளது" என்றார்.
இதன்பிறகு பாதுகாப்பு நிலவரம் குறித்து, வடக்கு படைப்பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா, அருண்ஜெட்லிக்கு விளக்கம் அளித்தார். அப்போது இந்திய ராணுவ தலைமை ஜெனரல் பிக்ரம்சிங் உடனிருந்தார். இன்று மாலையில் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்த உள்ள ஜெட்லி, அதன்பிறகு அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா அளிக்கும், இரவு விருந்தில் பங்கேற்கிறார்.
இதன்பிறகு நாளை காலை, காஷ்மீர் மாநிலத்திலுள்ள யுனிஃபைட் பாதுகாப்பு தலைமையகத்தில் அம்மாநில முதல்வர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜெட்லி ஆலோசனை நடத்துகிறார். யுனிஃபைட் பாதுகாப்பு அமைப்பு என்பது, ராணுவம், துணை ராணுவம், மாநிலம் மற்றும் மத்திய உளவுத்துறை அமைப்பின் கூட்டமைப்பாகும். காஷ்மீர் மாநிலத்தின் மிக உயரிய பாதுகாப்பு அமைப்பு இது. இந்த ஆலோசனைக்கு பிறகு, ராணுவ வீரர்களுடன் ஜேட்லி கலந்துரையாடி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க ஜெட்லி திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications