இந்திய நெட்டிசன்களின் அட்ராசிட்டி மூன்றே ஆண்டுகளில் 350 சதவீதம் அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் மூன்றே ஆண்டுகளில் 350 சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் பெருகிவிட்டதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல்தான் போலீசார் விழித்துக் கொண்டுள்ளனர்.
செல்போன்களில் இணையதள சேவை கிடைக்க தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் இணையதள பயன்பாடு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. எந்த ஒரு புது கண்டுபிடிப்பாக இருந்தாலும், நல்லதைவிட எதிர்மறையாக எதையாவது செய்து பார்ப்பதுதானே மனித குல வழக்கம். அதில், இணையத்துக்கும் விதிவிலக்கு கிடையாது.

எல்லாம் அதுக்குத்தான்...
ஆபாசம், ஏமாற்று, மோசடி போன்றவற்றுக்காக இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், செல்போன் எண்ணிக்கையைபோலவே தடாலடியாக கூடிவருகிறது.

வழக்குகளுக்கு ஏற்ற கைதுகள்
2010ம் ஆண்டில் சைபர் கிரைம் வழக்குகள் 966 பதிவு செய்யப்பட்டு, 799 பேர் கைது செய்யப்பட்டனர். 2011ல் 1791 சைபர் கிரைம் கேஸ்கள் பதிவாகிய நிலையில், 1,184 பேர் கம்பி எண்ணினர்.

போலீஸ் திணறல்
2012ல் வழக்குகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட டபுள் மடங்காகியது. 2,876 வழக்குகள் பதிவான நிலையில், 1,522 பேர் மட்டுமே கைதானார்கள்.
2013ல் நிலைமை நாலு கால் பாய்ச்சலில் மோசமானது. அவ்வாண்டு மொத்தம் 4356 வழக்குகள் பதிவான நிலையில், 2,098 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது, வழக்குகள் பென்ச் காரில் போனால், கைது நடவடிக்கைகளோ, ஷேர் ஆட்டோ வேகத்தில்தான் செல்கின்றன.

2வது நெட்டிசன்கள் நாம்தான்
2014ம் ஆண்டு முடிவடைவதற்குள் இந்தியாவில் 302 மில்லியன் பேருக்கும் மேல் இணையத்தை பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டது. அதாவது 30 கோடிக்கும் மேல் மக்கள் நெட்டிசன்களாக மாறிவிடுவார்கள். சீனாவுக்கு பிறகு இணையதள பயன்பாட்டில் 2வது இடத்தில் இருந்த அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா அந்த இடத்தை பிடிக்கும் என்பது அதன் சாரம்சம். 2015 பிறந்துவிட்டதால் இப்போது கணக்கெடுப்பு நடத்தினால் அந்த கணிப்பு உண்மை என்பதை உணர முடியும்.

மோசடி, பாலியல் தொல்லை
சைபர் கிரைம்கள் பெரும்பாலும், பண மோசடி தொடர்பானவையாக உள்ளன. இதற்கு அடுத்த இடம் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங்குகளுக்கு போய் சேரும்.

டீன் ஏஜ் கம்மி
சைபர் கிரைம் வழக்குகளில் கைது செய்யப்பட்டுவோரில் டீன் ஏஜ் குரூப் அதிகம் இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம். 2013ம் ஆண்டு புள்ளி விவரப்படி, சைபர் கிரைம் குற்றங்களுக்காக 18 வயதுக்கு உட்பட்டோர் 45 பேர் கைதாகியுள்ளனர். ஆனால் இப்போது டீன் ஏஜிலுள்ளோரும் செல்போன்களில் இணையத்தை பயன்படுத்துவதால் வருங்கால நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது.

சீனியர் சிட்டிசன்களும் இப்படியா?
அதேநேரம், 18 முதல் 30 வயதுக்குட்பட்டோர்கள்தான் அதிகம் கைதாகியுள்ளனர். 2013ல், மொத்தம் 1638 பேர் சைபர் கிரைம்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 30 முதல் 45 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுள்ளோரில் 1325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 275 சதவீதம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் 18 பேரும் நெட்டில் குடைச்சல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications