மகனின் இறுதிச்சடங்கு: இந்தியா வந்து சேர்ந்தார் கப்பல் கேப்டன் சுனில்

இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன், மும்பையைச் சேர்ந்த 38 வயது சுனில் ஜேம்ஸ். அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார்.
கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விஜயன் என்ற மாலுமியும் கைது செய்யப்பட்டார். குற்றம் செய்யாத சுனில் ஜேம்ஸை டோகோ நாட்டு சிறையில் இருந்து மீட்குமாறு அவரது குடும்பத்தார் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் , சோதனை மேல் சொதனையாக சிறையில் இருந்த சுனிலின் 11 மாத ஆண்குழந்தை கடந்த 2ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது. தனது பிள்ளைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் அதிதி குழந்தையின் உடலை மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாதுகாத்து வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக சிறையில் வாடிய கேப்டன் சுனில் மற்றும் விஜயன் என்ற மாலுமி மத்திய அரசின் தலையீட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார் சுனில். விரைவில் குழந்தைக்கான இறுதிச் சடக்குகள் செய்யப் படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications